Wednesday, April 11, 2012

சிறுநீரகக்கல் எனும் சிக்கல்

சிறுநீரகக்கல் எனும் சிக்கல்

தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன்.

சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே சிறுநீர் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.
பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட வரலாம். முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.
5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும். ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். ஐ.வி.பி. எக்ஸ் ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.
பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கல்லை அகற்றியதும் நிறைய தண்ணீர், பார்லி தண்ணீர், எலுமிச்சைச்சாறு குடிப்பதும், மட்டன், ஈரல் உணவுகள், பாதாம், பிஸ்தா, சாக்லெட்டை தவிர்ப்பதும்
பாதுகாப்பானது.’’
source: http://www.thinasari.com/?p=8141

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator