Saturday, April 7, 2012

மடுக்காட்டில் வெடிபொருட்களை எடுத்த மூவருக்கு விளக்கமறியல்

மன்னார் நிருபர்

மிதிவெடிகள் மற்றும் ரி. 56 ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆ ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். மடுதட்சணா மருதமடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய அந்தோனிமுத்து செபஸ்டியான் பிள்ளை அவரது மகன் 28 வயதுடைய செபஸ்டியான்பிள்ளை அந்தோனிப் பிள்ளை மற்றும் 30 வயதுடைய ஞானப்பிரகாசம் அருள்தாஸ் ஆகியோரே கடந்த வியாழன் மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு அவரின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது ;
மடுப்பகுதியிலுள்ள கோவில்மோட்டைச் சேர்ந்த வனப்பகுதிக்கு கடந்த 3 ஆம் திகதி தேன் சேகரிப்பதற்காக இந்த மூவரும் சென்றபோது அங்கு ஒரு தொகை வெடிபொருட்களைக் கண்டுள்ளனர். இவற்றிலிருந்த மிதிவெடிகளையும் ரீ. 56 ரகத்திற்குரிய வெடிக்காத ரவைகள் 250 யும் எடுத்து தம்வசம் வைத்திருந்தனர். பின்னர் காட்டின் நடுவே இந்த மிதிவெடிகளை பிரித்து அதிலுள்ள வெடிமருந்துகளை சேகரித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தக் காட்டுப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பதுங்கியிருந்த இராணுவத்தினர் இவர்களின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக அவதானித்த நிலையில் இந்த மூவரையும் அவர்கள் வைத்திருந்த வெடி பொருட்களுடன் கைது செய்தனர்.
இதனையடுத்து இந்த மூவரும் மடு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர். இந்த நிலையில் மடு பொலிஸார் நீதிமன்றத்தில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கான உத்தரவினை பெற்று இந்த மூவரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
பின்னர் மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி முன்னிலையில் இந்த மூவரும் மடுப் பொலிஸாரினால் கடந்த வியாழன் ஆஜர் செய்யப்பட்டனர். இந்நிலையில் மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்

Source: http://www.thinakkural.com/news/all-news/local/12335-2012-04-06-20-59-48.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator