Friday, April 27, 2012

தம்புள்ளை சம்பவம்! முஸ்லிம் அரசியல் தலைமைகள் நெருக்கடியில்!

தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், அரசாங்கம் பல தரப்பினரைப் பயன்படுத்தி மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமைக்கும் இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியதும், இந்தப் பிரச்சினை குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என அகில இலங்கை ஜம்யத் உலமா சம்மேளனமும், அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும், இதற்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மட்டக்களப்பு, காத்தான் முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திற்கும் இம்மாதம் 26ஆம் திகதி இனந்தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்றும் இன்றும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில், முஸ்லிம் மக்களை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் அரசாங்கத்திலுள்ள சில தரப்பினர் நடந்துகொண்டுள்ளனர். அத்துடன், முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பிக்குகள் சிலரும் பல நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கியமாக அந்த பிக்குகள் முஸ்லிம் கொடியையும், மத அடையாளச் சின்னங்களையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய தம்புள்ள விவகாரம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள்ளும் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லையெனில், அமைச்சுப் பதவிகளை துறந்துவிட்டு, அரசாங்கத்திலிருந்து வெளியேற நேரிடும் என தமது தரப்பினர் பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக கட்சியின் உயர்பீடம் சனிக்கிழமை கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தம்புள்ளை விவகார அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் மத்தியில் கருத்து மோதலாக உருவெடுத்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு முஸ்லிம்கள் பொறுப்புகூற வேண்டும் என அரசாங்கத்தின் பங்காளிகளான சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஜாதிக்க ஹெல உறுமய தரப்பினரும், அமைச்சர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியினரும் தெரிவிக்கின்றனர்.
எனினும், அரசாங்கத்திலுள்ள இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர்.
தம்புள்ளை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அரசாங்கத்திலுள்ள காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனும் கடுமையாக கண்டித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=17187

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator