Friday, April 27, 2012

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!

பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.

மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.


நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

இந்தியாவின் மிகப் பழமையான ஆதீன மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இது எப்போது தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் இந்த ஆதீனத்தை உயிர்ப்பித்து புதுப்பித்தார். முத்தமிழுக்குச் சங்கம் வைத்த மதுரையில் இந்த ஆதீனத்தை திருஞான சம்பந்தர் நிறுவினார்.

இப்படிப்பட்ட ஆதீனத்தின் அடுத்த தலைவராக நித்தியானந்தரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: http://tamil.oneindia.in/news/2012/04/27/tamilnadu-nithyanantha-head-madurai-adheenam-aid0091.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator