Tuesday, April 24, 2012

கணக்கு தேர்வில் பெயிலாகிவிடுவோமோ என்ற பயத்தில் +2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

சென்னை: கணக்கு தேர்வில் எங்கே பெயலாகிவிடுவோமோ என்ற பயத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரம் திருவள்ளுவர் நகர், சோலையம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஆதிமூலம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் வார்டனாக இருக்கிறார். அவரது மகள் வினோதினி(17). சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்த அவர் பொதுத் தேர்வுகள் முடிந்ததையடுத்து வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வினோதினி சாவதற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

என் சாவுக்கு நான் தான் காரணம். கணக்கு பரீட்சை கடினமாக இருந்தது. அதில் நான் பெயிலாகி விடுவேன் என்பதால் இந்த முடிவை எடுத்துவிட்டேன். அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் அயனாவரத்தில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தி்ல் பிஇ படித்து வந்த தைரியலட்சுமி என்ற மாணவி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வினோதினியும் தேர்வு தோல்வி பயத்தில் உயிரை விட்டிருப்பது கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator