Friday, April 27, 2012

கந்துவட்டி கொடுமை: ரூ. 2 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெண்!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெருகி வரும் கந்துவட்டி கொடுமையால் அப்பாவி மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். கடன் தொல்லை தீர ரூ.2 லட்சத்திற்கு ஒரு பெண் தனது குழந்தையை விற்றுள்ள பரிதாபம் அங்கு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறைவு. மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயத்திலும் உரிய லாபம் கிடைக்காததால் பலர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.


நெல்லை மாநகர பகுதியிலும் கூலித் தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள் அதிகம். பாளையில் உள்ள ஒரு சில அரசு குடியிருப்புகளைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் அன்றாடங்காய்ச்சிகள் குடியிருந்து வருகின்றனர். மாநகர பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்கள் தொழில் மற்றும் விழா தேவைகளுக்கு கடன் வாங்கியே வாழ்க்கை நடத்த வேண்டியது உள்ளது.

இதையே சாக்காக வைத்துக் கொண்டு கந்து வட்டிக்காரர்கள் களம் இறங்கி அப்பாவி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மீ்ட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வாரவட்டி, என வட்டி பணம் குட்டி போட பல வழிமுறைகளை அவர்கள் கையாளுகின்றனர்.

ஒருவர் ரூ.10,000 கடனாகப் பெற்றால் அவரிடம் முதலிலேயே ரூ.1,500ஐ பிடித்துக் கொண்டு ரூ.8,500 மட்டுமே வழங்கப்படும். அந்த பணத்தையும் அவர் நாள்தோறும் ரூ.100 என வழங்க முற்படும்போது அது மாதக்கணக்கில் இழுத்து ரூ.20,000த்தை தாண்டிவிடும்.

சிந்துபூந்துறையும், செல்வி நகருமே நெல்லை மாநகரத்தின் கந்து வட்டி கூடாரமாக கருதப்படுகின்றது. மாலை வேளையில் இப்பகுதியில் சீட்டும், குறிப்பேடுமாக கிளம்பும் கந்து வட்டிக்காரர்கள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தொழிலாளிகளை வாட்டி வதைக்கின்றனர்.

தொடர்ந்து பணம் தர மறுக்கும் நபர்களிடம் குடும்பத்தை பற்றியெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டுவதால் சில சமயங்களில் பிரச்சனை மூள்கிறது. சிந்துபூந்துறை மற்றும் உடையார் பட்டியில் வசிக்கும் பல சுய உதவிக்குழு பெண்கள் வங்கிகளில் தொழில் சார்ந்த கடன் வாங்கி அதை அப்படியே வட்டிக்கு விடுவதாகவும் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. குடும்பத் தேவைகளுக்காக பல பெண்கள் சுய உதவிக்குழுக்களிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

இந்நிலையில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்ற கொடுமை நடந்துள்ளது.

காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து கந்து வட்டிக் கொடுமைக்காரர்களை ஒடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.
source: http://tamil.oneindia.in/news/2012/04/27/tamilnadu-kanthuvatti-squeezes-tirunelveli-people-aid0175.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator