Sunday, April 29, 2012

தேயிலை ஏற்றுமதியில் வில்லங்கம் புதிய திட்டத்தால் ஆபத்து என அச்சம் _

  வெளிநாடுகளிலிருந்து விலை குறைந்த தரமற்ற தேயிலையை இறக்குமதி செய்து இலங்கை தேயிலையுடன் கலந்து வெளிநாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றை இலங்கை தேயிலை கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

வியட்நாம், இந்தோனேஷியா, கென்யா போன்ற நாடுகளில் இருந்து விலை குறைந்த தேயிலையை இறக்குமதி செய்து இலங்கைத் தேயிலையுடன் கலந்து மீண்டும் ஏற்றுமதி செய்ய தேயிலை கவுன்சில் ஆராய்ந்தபோது இதை எதிர்த்து தேயிலை கவுன்சிலின் அப்போதைய தலைவர் மெரில் பெர்னாண்டோ தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.



தரம் குறைந்த தேயிலையை இறக்குமதி செய்து எமது தேயிலையுடன் கலந்து மீண்டும் ஏற்றுமதி செய்தால் சர்வதேச ரீதியில் இலங்கை தேயிலைக்குள்ள பெயரும் தரமும் குறைந்து விடுமென மெரில் பெர்னாண்டோ வாதிட்டார். இருந்தும் இவரது வாதத்தை தேயிலை கவுன்சில் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதேவேளை, இது தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை வீரகேசரி வார வெளியீடு தொடர்பு கொண்டு கேட்டதும் அவர் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தேயிலை கவுன்சிலின் பதில் தலைவர் சிராஜ் டி மெல் இந்த விடயம் தொடர்பாக நீண்ட விளக்கமளிக்கும் பதில் கடிதமொன்றை மெரின் பெர்னாண்டோவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடும் விடயங்களை கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் ரஷ்யா, துபாய், ஈரான், உக்ரேன் போன்ற நாடுகள் இலங்கைத் தேயிலையை வெளிநாடுகளில் உற்பத்தியாகும் தேயிலையுடன் கலந்து பொதி செய்து விற்பனை செய்கின்றன.

எனவே இலங்கை கென்யா, இந்தோனேஷியா, வியட்னாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து எமது தேயிலையுடன் கலந்து பொதி செய்து ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் பெறலாமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேயிலை கவுன்சிலிலுள்ள தேயிலை ஏற்றுமதியாளர்கள் இவரது கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ___
Source:http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37818

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator