Saturday, April 28, 2012

பறக்க ஆசைப்படும் மனமும் சாத்தியப்படுத்தாத சுமைகளும்








எனக்குள் ஒரு கனவு இருக்கிறது, அதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறேன், அது ஒரு நாள் என் கைவசப்படும் சர்வ நிச்சயமாய்’ இப்படி ஒரு பெண் தன் மனதிற்குள் பதின்ம வயதில் உருவேற்றிக் கொண்டாள். ஆனால் அதற்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் களைந்தெறியவே அவளின் முழு நேரமும் பொழுதும் சரியாக இருந்தது.

திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், சமையல் அதுவும் சேர்த்து அலுவலக வேலைகள என அவளைச் சுற்றி எப்போதும் வேலைகளின் சுமைகள். ஓவியராகவோ கவிஞராகவோ திரை இயக்குனராகவோ அவள் உருவாக ஆசைப்படும் போது அவள் விட்டுத்தர வேண்டியது திருமண வாழ்க்கையை. பெண்கள் இதற்கு மட்டும்தான் என்று வரையறுப்பது யார்? கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்பவர்களாக இருக்கும் போது வேலைகளை யார் செய்வது தீர்க்க முடியாத சிக்கலாக வளர்ந்துவருகிறது இப்பிரச்சனை. சில வருடங்கள் முன்பு மனைவி சமைக்க மறுக்கிறாள் என்று உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார். இதற்கெல்லாம் விவாகரத்து தர ஏலாது என்று தீர்ப்பு கூறிவிட்டார்கள்.

நம் வேலைகளை நாம் பகிர்ந்து செய்து கொள்ள, நம் இல்லத்தை வெகு சிறப்பாய் வைத்திருக்க நம் ஒற்றுமையும் புரிதலும்தான் தேவை, இதில் ஆணாதிக்கம் பெண்ணியம் என்ற சொற்றொடர்கள் தேவையற்றவை. அலுவலகத்திற்கு சென்று அங்கு நீண்ட நேரம் உழைத்து, ஏதோ ஒரு வாகனத்தில் அலுத்து களைத்து வீடு வந்து சேரும் மனைவிக்கு அங்கே அதை விட மேலதிக வேலை காத்திருக்கிறது, சமையல் அறையில். காலையில் எப்படி போட்டிருக்கிறோமோ இரவில் அவை அப்படியே இருக்கும் ஒரு துரும்பும் அசைந்திருக்காது. கணவரோ இதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் பெரும்பான்மையாக இருப்பதில்லை. அவருக்கு அன்றைய க்ரிக்கெட் மாட்ச்தான் அதிமுக்கியம். போதாதற்கு குறையும் சொல்வார், நேரம் கழித்து வந்தமைக்கோ, வீட்டை சரியாக நிர்வகிக்க தெரியவில்லை என்றோ. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமையும் அச்சொற்கள். எது அவரை ரீவி அருகில் அமர்ந்து கொண்டு கட்டளையிடவும் அதை சிரமேற்றுக் கேட்டுக் கொள்ளும் நிலையில் எம்மையும் வைத்திருக்கிறது? அன்பா? பிணைப்பா? அன்பென்றால் அவர் காபியோ தேனீரோ தயாரித்து தந்திருப்பார், அல்லது பிரியமான வார்த்தைகளை அல்லவா சொல்லியிருப்பார்? அவருக்குத் தெரிந்ததெல்லாம் பெண் சமையல்காரி, வீட்டுக்காரி, சம்பளம் வாங்கும் சம்பளமில்லாத வேலைக்காரி. வெளியில் சென்று வேலை செய்வதால் அவளை இன்னும் அதிகமாக கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். சிந்திக்க முடியாத வகையில் வேலைச் சுமையில் அவள் மூழ்க வேண்டும். ஆண்கள் சுகவாசிகள். அவர்கள் கழற்றி எறியும் பனியன்களையும், பேண்டுகளையும் துவைத்துப் போடத்தான் இப்பிறவி எமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. எந்த ஆணாவது தன் மனைவியின் புடவையோ சுடிதாரோ துவைத்திருப்பாரா? அல்லது தப்பித்தவறி சமைத்திருப்பாரா? பேச்சுலராக இருந்தப்பா நல்லா சமைப்பேன், இப்ப கல்யாணம் ஆனதும் சுத்தமா மறந்து போச்சு என்பவர்கள் உண்டு, ஏன் மறக்காது மனைவி என்ற பெயரில் ஒரு சமையல் இயந்திரத்தை நீங்கள் தருவித்து விட்டீர்களே?

சிறு வயதில் பெண்களை வீட்டு வேலைகளை செய்ய பழக்குவார்கள் அதைப் போன்று நம் ஆண் குழந்தைகளுக்கும் எல்லா வேலைகளையும் பழக்கித் தர வேண்டும். சென்ற தலைமுறை வரை ஆண்பிள்ளை என்பவன் படிப்பவன் சம்பாதிப்பவன் குடும்பத்தின் ஆணிவேர், அவனை சுற்றித் தான் எல்லா இயக்கமும் என்றிருந்தது. எனவே கண்ணும் கருத்துமாய் அதற்கேற்றாற் அவனைக் கவனித்துக் கொள்வது இயல்பாயிருந்தது. பெண்களை வீட்டு வேலைக்கும் ஆணை போஷிக்க, அவனுடைய அனைத்துத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க பெண்களை பயிற்றுவித்தார்கள். ஆனால் இப்போது நிலைமை இவ்வாறு இருக்கவில்லையே. பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், வீட்டு வேலைகள் மட்டும் இன்னும் அவர்கள் தலையிலேயே. இரு குதிரையில் எப்படி ஒருவர் சவாரி செய்ய முடியும்? மேலதிக வேலையை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத போது அவள் உடைந்து சிதறிப் போகிறாள்.ஆண் அளவிற்கு சில சமயம் அவனையும் விட படிப்பையும் சம்பாத்தியத்தையும் ஈட்ட ஆரம்பித்துவிட்ட பெண்பிள்ளைகளை மட்டும் இன்னும் சமையல் அறைகளின் சட்டங்களிலே நம் சமுதாயம் பூட்டிவைக்க நினைப்பதே எவ்வகையில் நியாயம்?

பெண் எவ்வளவு படித்திருந்தாலும், பெரிய பதவிகளை வகித்திருந்தாலும் சமையல் அறையில், வீட்டின் வேலை சுமைகளாலும் கண்ணுக்குத் தெரியாத சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறாள். அவள் எவ்வளவு தூரம் பறந்தாலும் வீடு திரும்பித்தான் ஆக வேண்டும். வீட்டின் மூலையில் ஒரு அறை இருக்கிறது, எங்கு சென்றாலும் அதுதான் அவளுக்கு சாஸ்வதமான இடம் என்று எழுதப்படாத விதியொன்று காலகாலமாய் இயங்கி வருகிறது.

நாம் சாதிக்க விழையும்போது அதற்கான அடிப்படை தேவை விழிப்புணர்வு. சமைக்கலாம், துவைக்கலாம், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம், எல்லாம் நம் வேலைகள்தான், அதைச் செய்வதில் நாம் ஒன்றும் குறைந்துவிடமாட்டோம். அவ்வேலைகள் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் இரு பொறுப்புகளை தோளில் சுமக்கும் போது பெரும் அயற்சி ஏற்படுகிறது. நாற்பது வயது பெண்களுக்கு எவ்வளவு உடல் உபாதைகள், எவ்வளவு பிரச்சனைகள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும்? இதற்கெல்லாம் காரணம் அவர்கள் குடும்பத்தை தாங்குவதாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் அத்தனை வேலைகளும்தான். மனதை லேசாக இருக்க விட அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. பணத்தை துரத்தி ஓட்டம், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க பரபரப்பாக அதி வேக ஓட்டம், இந்த பந்தயத்தில் தோற்றுக் கொண்டிருப்பதுதான் தானும் தன் சுயமும் என்பதை அறியாமல் தலைதெறிக்க அப்படி ஒரு ஓட்டத்தை நாமெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

ஆணுடன் போட்டிப் போடவோ அவர்களை மட்டம் தட்டுவதோ நம் நோக்கமல்ல. வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற உரத்த குரலைதான் முன்வைக்கிறோம். பெண்கள் ஒரு போதும் ஆணாகிவிடமுடியாது, அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். பெண்கள் தன் தனித்தன்மைகளை வைத்துக் கொண்டு, தன் இயல்புகளையும் கைவிடாமல் தன் வழி நடந்தால் அவள் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட அத்தனை கனவுகளையும் வசப்படுத்தலாம்.

(16.3.09 – ‘வீரகேசரி’ சஞ்சிகையில் வெளியான கட்டுரை இது)

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator