Tuesday, April 17, 2012

சர்தாரியை மறுத்துப் பேசியதால் பதவியை இழக்கும் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா?

டெல்லி: பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹினா ரப்பானி கர் தனது பதவியை இழக்கக்கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராஸா கிலானி கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த புதிய குழு அமைக்கப்படும் என்றார். புதிய குழு பற்றி அவர் எந்த விவரமும் கொடுக்கவில்லை.


அவரது பேச்சை வைத்து தான் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹினா ரப்பானி கரின் பதவி பறிபோகலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்த ஹினா வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜ்மீர் தர்காவுக்கு வந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் வந்திருந்தார். ஆனால் ஹினா வரவில்லை. அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் தாமஸ் நைட்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் வந்தது. அது சர்தாரியிடம் வரும் மே மாதம் சிகாகோவில் ஆப்கானிஸ்தான் குறித்து பேச்சுவராத்தை நடத்தினால் அதில் பாகிஸ்தான் கலந்துகொள்ளுமா என்று கேட்டது. அதற்கு அவர் முறையாக அழைத்தால் பங்கேற்கும் என்றார்.

ஆனால் லாகூரில் வைத்து அந்த குழுவை சந்தித்த ஹினா பாகிஸ்தான்-அமெரிக்கா இடையேயான உறவு குறித்து நடந்து வரும் மறுபரிசீலனையை நாடாளுமன்றம் இறுதி செய்யும் வரை வாஷிங்டன் வருவது பற்றி யோசிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். சர்தாரியின் பேச்சை மறுத்து பேசியுள்ளதால் அவரது பதவி பறிபோகலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் நேட்டோ படைகள் தாக்குதலில் 24 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகே பாகிஸ்தான்-அமெரிக்கா இடையேயான உறவை அந்நாடு மறுபரிசீலனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

மூலம்:- தட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator