Thursday, April 26, 2012

ஐ. நா. விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய குழுவொன்று அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்படவேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய பல சந்திப்புகளை நடத்தவுள்ளது என்றும் இலங்கையின் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட முக்கிய பல அதிகாரிகளைச் சந்தித்து இந்த உயர்மட்டக்குழு கலந்துரையாடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



இலங்கை அரசின் வெளிவிவகார நடவடிக்கைகளைக் கையாளும் முக்கியஸ்தர்களையும் ஐ.நா. குழு சந்தித்து பேச்சு நடத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், அந்தச் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாராகவில்லை என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அரசு நாட்டில் முன்னெடுத்து வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்து ஐ.நா. அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றும் அறிய முடிகிறது.

இலங்கை விஜயத்தை முடித்துகொண்டு திரும்பும் குழு தனது ஆய்வறிக்கையை நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் கையளிக்கும்.

அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இவ்வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அந்த விஜயத்துக்கான முன்னேற்பாடுகளை ஆராயவே இந்தக் குழு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

http://ponguthamil.c...48-53883cfb95f2

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator