Wednesday, April 25, 2012

மனித உரிமைகளை பாதுகாக்கும் அக்கறையுடன் அமெரிக்கா இலங்கைக்கெதிரான பிரேரணையை கொண்டுவரவில்லை - மஹிந்த சமரசிங்க

மனித உரிமைகளை பாதுகாக்கும் அக்கறையுடன் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை மனித உரிமைப் பேரவையில் கொண்டுவந்ததாக கருதக்கூடாது. இந்த விடயத்தில் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி நிரல் இயக்கப்பட்டது. அதே நிகழ்ச்சிநிரலை மீண்டும் ஜெனிவாவில் கொண்டு நடத்த முயற்சிக்கலாம். மார்ச் மாதம் அல்லது ஜூன் மாதம் அல்லது ஒக்டோபர் மாதங்களில் இவ்வாறு முயற்சிக்கலாம் என்று சிறீலங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எமது அனுமதியின்றி உள்நாட்டு செயற்பாட்டுக்கு மனித உரிமைப் பேரவை தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியாது. எனினும் விரைவில் அவர்கள் எமக்கு உதவி வழங்குவது குறித்து யோசனை முன்வைக்கும் சாத்தியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை பார்க்கும் போது எமது அனுமதியின்றி உள்நாட்டு செயற்பாட்டுக்கு மனித உரிமைப் பேரவை தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியாது.

எனினும் விரைவில் அவர்கள் எமக்கு உதவி வழங்குவது குறித்து யோசனை முன்வைப்பார்கள். அதாவது எமது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தாம் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயார் என்று கூறலாம். வேறு நாடுகளுக்கு இவ்வாறு உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அதுபோன்று இலங்கைக்கும் உதவி வழங்க தயார் என்றும் கூறுவார்கள்.

ஆனால், மனித உரிமைப் பேரவையில் நான் நிகழ்த்திய இறுதி உரையில் இந்தப் பிரேரணையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். இதுதான் எமது நிலைப்பாடாகும்.

அதேவேளை அமெரிக்கா எமக்கு எதிராக ஏன் இவ்வாறான பிரேரணை ஒன்றை கொண்டுவந்தது என்று நாம் ஆராயவேண்டியுள்ளது. 2009 ஆம் ஆண்டிலும் அதற்கு பின்னரும் கூட அமெரிக்கா எமக்கு எதிரான போக்கை கொண்டிருக்கவில்லை. திடீரென தற்போது ஏன் இவ்வாறான போக்கை அமெரிக்கா பின்பற்றுகின்றது என்று நாம் ஆராயவேண்டும்.

அந்த வகையில் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பக்கச்சார்பான நிலையில் இருந்துகொண்டே அமெரிக்கா இந்த பிரேரணையை கொண்டுவந்தது. அதற்கு வாக்குகளை சேகரிக்கும் முயற்சியிலும் அமெரிக்கா பக்கச்சார்பான முறையிலேயே செயற்பட்டது.

காரணம் உண்மையில் இலங்கையானது யுத்தத்தின் பின்னர் பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். அது தொடர்பில் பிரேரணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இலங்கைக்கு எதிரான பிரேரணை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமெரிக்கா செயற்பட்ட விதத்தை பார்க்கும்போது இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்த அக்கறையில் அமெரிக்கா செயற்பட்டதாக தெரியவில்லை. அது பின்னர் அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாறியதை அவதானிக்க முடிந்தது. அழுத்தங்களை பிரயோகித்து வாக்குகளை பெற்றனர். அமெரிக்காவை எதிர்க்க முடியாது என்பதற்காக பல நாடுகள் எமக்கு எதிராக வாக்களித்தன.

அதன்படி இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கும் அக்கறையுடன் அமெரிக்கா இந்தப் பிரேரணையை கொண்டுவரவில்லை. இந்த விடயத்தில் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி நிரல் இயக்கப்பட்டது. அதே நிகழ்ச்சிநிரலை மீண்டும் ஜெனிவாவில் கொண்டு நடத்த முயற்சிக்கலாம்.மார்ச் மாதம் அல்லது ஜூன் மாதம் அல்லது ஒக்டோபர் மாதங்களில் இவ்வாறு முயற்சிக்கலாம்.

அதாவது மீண்டும் ஒருறை இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் பிரேரணை கொண்டுவரப்படலாம். தற்போது கொண்டுவரப்பட்டதைவிட ஆழமான பிரேரணை ஒன்று கொண்டுவரப்படலாம். எனவே எவ்வாறான நிலைமையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் நாங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Source: http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=13666:2012-04-25-12-00-10&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator