Thursday, April 19, 2012

சுஷ்மா அம்மையாரைப் புகழ்ந்து தள்ளுகிறது இலங்கை அரசு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் தலைவரான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரியானவர் என பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பாராட்டுத் தெரிவித்தார்.தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு பாராட்டினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
இங்கு வந்துள்ள அவர் அவருடைய நாட்டின் கொள்கைகளை விமர்சிக்கவில்லை. அவர்களுடைய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாதவிவாதங்கள் பற்றி வீணாக கதைக்கவில்லை.
வடக்கு கிழக்கு நிலைகளை அறியவும் இலங்கை தொடர்பான நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் இந்திய பாராளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் நல்லதொரு சந்தர்ப்பமாக அமைகிறது.


இந்திய பாராளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் காலத்துக்குத் தேவையான ஒரு நிகழ்வாகும்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று அங்குள்ள உண்மையான நிலைமையைப் பார்க்க அவர்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்.
மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் அந்தப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பலஸ்தீனத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளபோதும் அவர்களின் மீள்குடியேற்றம் இன்னும் முடிவில்லை. ஆனால் இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களில் 95 வீதமானவர்கள் ஏற்கனவே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இன்னும் 3500 பேரே மீள்குடியமர்த்தப்பட உள்ளதாக நாம் கூறி வந்தோம். அதனை அவர்களுக்கு நேரடியாகவே அறிந்துகொள்ள வாய்ப்புக்கிட்டியது. அவர்களே நேரில் போய் அதனை அறிந்துகொண்டனர்.
அதன்படி மெனிக் பாமில் 1800 பேரும் சாம்பூரில் 1600 பேருமே இன்னும் மீள் குடியமர்த்தப்பட உள்ளனர் என்பதை அவர்களே உறுதிப்படுத்துகின்றனர். அதன்படி நாம் கூறியதை விட குறைவாக 3400 பேரே இன்னும் மீள் குடியமர்த்தப்பட உள்ளனர்.
மீள்குடியேற்றப்பட்டவர்கள் அவர்களுடைய சொந்த இடங்களிலா மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்ற ஒரு கேள்வி நிலை இருந்தது. அதற்கான தெளிவையும் நேரடியாகவே அறிந்துகொள்ள வாய்ப்புக் கிட்டியது. 200 பேரே மாற்று இடங்களில் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தி அடையாமையே அதற்கான காரணமாகும். அந்தப்பணிகள் முடிவடைந்ததும் அவர்களும் சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படுவர்.
இந்திய அரசாங்கத்தின் உதவியால் வடக்கில் 41 ஆயிரம் வீடுகளும் கிழக்கில் 9 ஆயிரம் வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களை இந்திய குழுவினர் நேரில் சந்தித்து அளவளாவினர்.
அவ்வாறு உரையாடியதன் மூலம் அவர்களுக்கு கொழும்புக்கு வரவிடாமல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு மீதும் படையினர் மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொழும்புப் பகுதிக்கு செல்லவிடாமல் இலங்கை அரசாங்கமோ படையினரே தடை விதித்துள்ளார்களா என்று இந்தியக் குழுவினர் அவர்களிடம் நேரடியாகவே கேட்டனர். அவ்வாறு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
தமது பிள்ளைகளை விடுதலைப்புலிகள் பலவந்தமாகவே எடுத்துச் சென்றார்கள் என அந்த வீடுகளில் குடியிருந்த சிலர் இந்தியக் குழுவிடம் தெரிவித்தமை உண்மை நிலையை நன்கு உணர வைக்கின்றது.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் பிரதிநிதிகளை இக்குழுவில் இடம்பெறச் செய்யாமை அவர்களுடை அரசியல் நோக்கமாகவே இருக்கலாம். தமிழ்நாடு அல்ல உலகிலுள்ள எந்த நாட்டவர் வந்தாலும் சுதந்திரமாக வடக்கு கிழக்கிற்கு சென்று உண்மை நிலைகளைக் கண்டறிந்துகொள்ளலாம்.
உண்மையான நோக்கத்துடன் வடக்கு கிழக்கில் அனைத்து விடயங்களையூம் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனால் யாராவது வந்து பார்ப்பதானால் அதனை நாம் வரவேற்கின்றோம்.
எமது செயற்பாடுகளின் உண்மை நிலையை உலக நாடுகள் அறிந்துகொள்ள அது வழிவகுக்கும். எனவே யார் வருவதானாலும் அவர்களை வரவேற்பதேயன்றி அது குறித்து எவ்வித அச்சமும் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கில்லை.
இந்தக் குழு வந்ததால் எத்தனையோ உண்மைகள அவர்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்.
இரண்டு வருடம் 11 மாதம் என்ற குறுகிய காலக்கெடுவில் மீள்குடியேற்றத்தை பூர்த்தி அடையும் கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன் பாரிய வீதி அபிவிருத்தி மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை கண்டு இக்குழுவினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
இந்திய இலங்கை உறவை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த சான்றாக அமைகிறது.
வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய பாராளுமன்றத்தில் விளங்கப்படுத்தி இது தொடர்பில் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்த இந்திய பாராளுமன்றக் குழுவினர் முக்கியமானவர்கள்.
தமிழ் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயத்தை இந்தியா அதிகரிக்க முடியும் என பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேலும் தெரிவித்தார்.
http://www.saritham.com/?p=57509

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator