Sunday, April 8, 2012

தோணிதாட்ட மடுவின் சோகக் கதை

  போய்க்கொண்டே இருந்தோம். அந்த முகங்களைத் தேடி. அடர்ந்த காடு, உடைந்த றோட், விரிந்த புல், வயல் வெயிலில் காய்ந்த பயிர் போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம். அங்கே கண்ட காட்சிகள் எம்மை அதிர்ச்சி அடைய வைத்தன.



ஆம் அதுதான் கோறளைப்பற்று வடக்கில் நில வளம், நீர் வளம் ஒருங்கே அமையப்பெற்ற வாகரைப் பிரதேசத்தில் அமைந்த ஒரு பழம் பெரும் கிராமமாகும். இதன் பெயர் தோணிதாட்ட மடு. இது புளிச்சாக்கேணி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ளது. இங்கு மொத்தமாக 47 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. மக்கள் தொகை 171. அதில் கணவரை இழந்த 7 பெண்களும் பாடசாலை செல்லும் 15 மாணவர்களும் 13 பாலர் வகுப்புச் சிறார்களும் உள்ளடங்குவர்.

மட்டு. மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய கிராமம் இது என்றால் அது மிகையில்லை. இது யுத்த காலங்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் முற்றாக இடம்பெயர்ந்து வாழைச்சேனை இடம்பெயர் முகாம்களில் தத்தளித்து அல்லோலகல்லோலப்பட்டு சொந்த மண்ணுக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் இன்று காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். இந்த 47 குடும்பங்களில் 34 குடும்பங்களுக்கு மாத்திரம் என்.ஆர்.சி.யால் தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய குடும்பங்கள் சேதமடைந்த தமது வீடுகளிலேயே வாழ்கின்றனர். இங்கு பிரதானமாக சேனைப் பயிர்ச்செய்கை உள்ளது. தவிரவும் வேளாண்மை, வீட்டுத்தோட்டம் என்பனவும் செய்கை பண்ணப்படுகின்றன.





(காட்டுப்பாதையில் பயணம் செய்யும் சின்னஞ்சிறுசுகள்)

ஒரு சமூகத்தின் கண்ணாக இருக்கவேண்டியது அறிவாகும். அந்த அறிவைப் பெற இந்தச் சின்னஞ் சிறுசுகள் படும்பாடு பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாத நிலையில் பிள்ளைகளின் கல்வியை பெற்றோர்களால் எப்படி நிவர்த்திக்க முடியும்? மூன்று வேளை உண்ணும் சமுகத்துக்கே படிப்பு வராத நிலையில் ஓரிரு வேளையுடன் காலத்தைக் கடத்தும் இந்தச் சிறார்களின் நிலையை யாரறிவார்?

பாவனைக்கு வீதியில்லை, பசிக்குச் சோறில்லை, வேலைக்கு தொழிலில்லை, வேதனைக்கு மருந்தும் இல்லை, குடிக்க நீர் இல்லை, படிக்கப் பள்ளி இல்லை, பிள்ளைக்குப் பால் இல்லை, பசிக்குக் கூழும் இல்லை, கூடவே யானைத் தொல்லை. ஆனால் அவர்களிடம் இருப்பதெல்லாம் மனத் தைரியமும், மானமும், உழைக்கும் ஊக்கமும் எள்ளையும் ஏழாக்கி வந்தோரை வாழ வைக்கும் தமிழ்ப் பண்பாடும் தான்.

இப்படி எத்தனை கிராமங்கள்... இவற்றை முன்னேற்றாமல் கொண்டாட்டங்கள் செய்வதில் என்ன பயன்? சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். அந்தச் சுவரே எமது அன்புக்குரிய மக்கள்தான். அவர்கள் வறுமையால் பரிதவிக்கும் போது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு வேறொன்றும் துணையாகாது.

இங்கு ஒன்று இரண்டல்ல நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. 30 வருட கால கொடிய யுத்தத்தில் சீவனைத்தவர சீவியத்தையே இழந்த வெறும் மனிதர்கள் தான் இவர்கள். ஒரு வருத்தம் வாதை ஏற்ப்பட்டால்கூட பொதுவான போக்குவரத்து வசதிகள் கிடையாது, அப்படிப் போக வேண்டுமானால் இங்கிருந்து எட்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள கதிரவெளிக்கு பொடி நடையாகவும் ஈருருளியிலும்(சைக்கிள்) மாட்டு வண்டியிலும்தான் பயணம் செய்ய வேண்டும். எங்கள் மண்ணிலும் ஆடு, மாடுகள் போல் காட்டுக்குள் விரட்டப்பட்ட பட்டாளம் போல் இன்னும் இன்னும், நினைத்தால் வெட்க்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கிறதல்லவா?





(யுத்த வடுக்களுடன் வாழும் மக்கள்)

கல்வியைப் பெறுவதில் பிரச்சினை

எழுத்தறிவித்தவன் இறைவன். ஆனால் நம்மில் எத்தனை பேர் மனிதனாய் கூட நடவாமல் இருக்கிறார்கள். உடைந்து கிடக்கும் ஒரு பாழடைந்த வீட்டில் சந்து குத்தப்பட்ட கற்களின் நடுவே அ, ஆ என்ற அடிப்படையே ஆடிப்போய்க் கிடக்கிறது. எங்கள் குழந்தைகள் அல்லவா!! எங்கள் தமிழ் உறவுகள் அல்லவா!! இங்கு இவர்கள் கற்பதற்கு ஒரு நிரந்தர இடம் கூடக் கிடையாது.

இங்கு பயிலும் அநேக சிறார்களின் காலில் செருப்புகள் கூட கிடையாது, பள்ளிக்குச் செல்ல சிறு பை கிடையாது, இருக்க கதிரையில்லை, எழுத கொப்பி இல்லை, நடக்க செருப்பு இல்லை சிரிக்கக்கூட தெம்பில்லை.... ஆகவே இலங்கை தனது மிலேனியம் இலக்கை ~மிதமிஞ்சிய வறுமையையும் பட்டினியையும் ஒழித்தல்| என்கின்ற சுலோகத்தில் 2015இல் அரைவாசிக்கும் குறைவாக்குவது சாத்தியமாக்குமா?

அதுபோல் மற்றுமோர் இலக்கான 'எல்லா நிலைகளிலும் ஆரம்பக் கல்வியை சாதித்தல்' என்கிற இலக்கும் மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் சிந்திக்க வேண்டிய ஒன்றே. இருந்தும் 50 வீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை தாய்மொழியில் எடுக்கும் பிரதேசத்தில் வடக்கில் 72 வீதமும் கிழக்கில் 82 வீதமும் 2007ஆம் ஆண்டின் 'எம்டிஜி இலங்கை நாட்டு நிலைமை அறிக்கை 2008/09' இல் குறிப்பிடப்பட்டிருப்பது தாய் மொழி மேலுள்ள இம்மக்களின் பற்றைக் காட்டச் சிறந்த ஆதாரமாகும்.

இன்னும் தேசிய வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் வீதாசாரம் 20க்கும் அதிகமாக இருக்கும் ஒரே மாவட்டம் மட்டக்களப்புத் தான் என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை?

குடிநீர்ப் பிரச்சினை



(நீரின்றி வற்றிக் கிடக்கும் கிணறு)

மினரல் வோட்டர் குடிக்கும் எம் சமுகம் குடிநீரே இல்லாமல் பரிதவிக்கும் சமூகத்துக்கு உறுதுணை புரியுமா? அவர்கள் அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் வாழ்வது ஒன்றும் வேதனைக்குரிய விடயமல்ல. பாலைவனத்திலும் வசதியுடன் வாழவில்லையா? ஆனால் தொழிநுட்ப வளர்ச்சியால் கிராமமாக சுருங்கி விட்ட உலகத்தில் இவர்கள் பாராமுகமாய் இருப்பதுதான் வேதனை.





(நீரைப் பெற அவதியுறும் மக்கள்)

இவ்வாறான காரணங்களினால்தான் தான் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகளின் போஷாக்கு மிகவும் மோசமான மந்த நிலையில் உள்ளது. இலங்கைக்கான மிலேனியம் இலக்கு அறிக்கையின் பிரகாரம் உடல் நலிவடைந்த குழந்தைகளின் விகிதம் 19.5 ஆகவும், வயதுக்கான நிறை குறைந்தவர்களின் விகிதம் 32.9 ஆகவும் உள்ளது. ஆனால் கம்பஹா மாவட்டத்தில் வயதுக்கான நிறை குறைந்தவர்களின் விகிதம் 16.9 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.




(யானைகளிடமிருந்து பாதுகாக்க விடியா விளக்கு)

யானைகள் பெருகி விட்ட நிலையில் எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமில்லை. இந்த யானைகளை அழிக்கவும் முடியாமல் அதனால் அழிந்து போவதைத் தடுக்கவும் முடியாமல் இம்மக்கள் நாளாந்தம் அஞ்சி வாழும் நிலையில், இவர்கள் பெயரால் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி எல்லாம் எங்கே போகிறது? இந்த மக்களுக்கான பணம் வெளியே போகும் போது யானைகள் உள்ளே வராமல் என்ன செய்யும்?





(யானைகளின் அட்டகாசத்தால் உடைந்து கிடக்கும் கட்டிடம்)

மின்சார வசதிகள் இல்லை. நாளாந்தம் காட்டு வெள்ளம் போல் ஏறும் விலைவாசிக்கு மத்தியில் மண்ணெண்ணெய் விளக்கில் குப்பி லாம்பில் படித்து சித்தியடைய முடியுமா?

இம்மக்களைப் போன்ற எத்தனையோ வறிய எம் சமூகத்தை நாங்கள் ஏன் முன்னேற்றக் கூடாது? இங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், இவர்களுக்கு குழாய்க் கிணறுகள் மூலம் நீர் வழங்குவதென்றால் சுமார் 10 கிணறுகள் தேவைப்படுகின்றன. அதுபோல் நிரந்தர பாலர் பாடசாலைக் கட்டிடம் தளபாடங்கள், கற்றல் உபகரணங்கள் என்பனவும் தேவையாக உள்ளன. பாடசாலை செல்லும் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் தேவைப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக யானைக்கான பாதுகாப்பு வேலி, தற்காப்பு சாதனங்கள் என்பனவற்றுக்கான தேவை இருந்தும் இருந்தும் யார் இவற்றை எல்லாம் இம் மக்களுக்கு இரந்தளிப்பார்?

சிந்திப்போம் செயலாற்றுவோம்.

படமும் தகவலும்: சி.தணிகசீலன்
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37455

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator