வடக்கில் பல பாகங்களில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்ட அடிப்படையில் அசுர வேகத்தில் அரங்கேற்றிவரும் இலங்கை அரசு, தற்போது மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றது என மிகவும் நம்பகரமான முறையில் "உதயனு'க்குத் தெரியவருகின்றது.
மன்னார் மாவட்ட அரச அதிபர் சரத் ரவீந்திரவின் தலைமையின் கீழ் "மன்னார் மாவட்ட பௌத்த ஒன்றியம்'' என்ற அமைப்பை நிறுவி அதனூடாக ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அறியமுடிகின்றது.
மன்னாரில் முதல் தட வையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த அமைப்பில் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிக்குகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.தமிழ் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் மன்னார் அரச அதிபராக சரத் ரவீந்திர நியமனம் பெற்றபின்னரே மன்னாரில் சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இற்றைக்கு 6 வருடங்களுக்கு முன்னர் மன்னார் மடு சந்தியில் அத்துமீறி 60 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. அதன் பின்னர் மீன்பிடித் தொழிலுக்காகத் தெற்கிலிருந்து சென்றோர் இராணுவத்தின் உதவியுடன் ஆங்காங்கே குடியமர்த்தப்பட்டனர்.
ஆனால், யுத்தத்திற்குப் பின்னர் வெளிப்படையாகவே சிங்களக் குடியேற்றங்கள் மன்னார் உள்ளிட்ட வடக்கில் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக, மன்னார் மீள்குடியேற்றக் கிராமங்களில் சிங்களவர்களை இருத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரியவருகின்றது.
அத்துடன், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு ஆலயக் கிராமத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மன்னார் வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஆலய வளாகத்தில் பௌத்த பாலர் பாடசாலையொன்று அமைக்கப்பட்டு வருகின்றது என்றும், காணிகளைத் துப்புரவாக்கி சிங்கள மக்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது என்றும் தகுந்த ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
Source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=209611032107143959

No comments:
Post a Comment